A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

30 Nov 2012

அகிலனின் 'தாகம்'

அகிலனின் கதைகளைப் படிப்பது மிகவும் கொடுமையான அனுபவம் என்று அண்மையில் ஒரு நண்பர் சொன்னார். 'நீங்கள் அகிலனின் மொழிபெயர்ப்புகளை வாசிக்க வேண்டும், அவை மிக அருமையானவை,' என்று அவருக்கு பதிலளித்தார் மற்றொரு நண்பர். அகிலன், மாப்பஸான் கதைகள் மற்றும் ஆஸ்கார் ஒயில்டை மொழிபெயர்த்திருக்கிறார் என்பது எனக்கு ஒரு நம்ப முடியாத செய்தியாக இருந்தது. விக்டோரிய காலத்து ஒழுக்க விழுமியங்களுக்கு எதிரான கலகக்காரனாக இருந்த ஒயில்டு, அவரது தற்பாலின விழைவால் எழுந்த பிரச்சினைகளுக்காக மிகக் கடுமையாக தண்டிக்கப்பட்டார். மத்தாப்பாகத் தெறிக்கும் ஒயில்டின் மொழி மற்றொரு காரணம் - அவரது எழுத்தில் மேற்கோள்களாக கையாளத்தக்கவற்றைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்த முன்னூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட புத்தகத்தை வாசித்திருக்கிறேன், ஒயில்டின் எழுத்தில் ஒவ்வொரு பத்தியிலும் ஒரு மேற்கோளைக் காணலாம். "சினிக் என்பவன் யார்? எல்லாவற்றின் விலையையும் அறிந்தவன், எதன் மதிப்பையும் அறியாதவன்" என்ற ஒரு மேற்கோளே காலத்துக்கும் போதும். அகிலனின்  இழுத்துப் போர்த்திய, கனமான  நடையை, "நாமெல்லாரும் சாக்கடையில்தான் கிடக்கிறோம், ஆனால் நம்மில் சிலர்தான் நட்சத்திரங்களைப் பார்க்கிறோம்" என்று சொன்னவரோடு இணைத்தே பார்க்க முடியவில்லை.

ஆஸ்கார் ஒயில்டின் சலோமி என்ற நாடகத்தை அகிலன் தாகம் என்ற குறுநாவலாக மொழிபெயர்த்திருக்கிறார், அதைவிட, தழுவி எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம். ஒரு நாடகத்தை குறுநாவலாக மொழிபெயர்க்க முடியாது என்பது மட்டுமல்ல, அகிலன் நிறைய சுதந்திரம் எடுத்துக்கொண்டுதான் இந்த வேலையைச் செய்திருக்கிறார். அகிலனுக்கும் ஒயில்டுக்கும் என்ன ஒற்றுமை, இந்தக் கதையை ஏன் அவர் மொழிபெயர்க்க எடுத்துக்கொண்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அகிலனின் 'கற்பான' தழுவல் ஒயில்டின் வரம்பு மீறிய தழுவலைச் சுத்திகரிப்பதாக இருக்கிறது.


இந்த நாடகத்தின் மிகச் சிறந்த, மறக்க முடியாத, நிலையான தாக்கத்தை ஏற்படுத்திய பகுதி ஆஸ்கார் ஒயில்டின் ஸ்க்ரிப்டில் அடைப்புக்குறிகளுக்குள் இருக்கிறது. 'Salome dances the dance of the seven veils', என்ற சிறு குறிப்பு அது. உலகில் அதற்கு முன்னெப்போதும் இல்லாத நடனம் அது - ஒயில்டின் கற்பனை இன்று அதை ஒரு அரேபிய நடனமாக மக்கள் மனதில் கட்டமைத்திருக்கிறது.  ஆனால் உண்மையில் இது முழுக்க முழுக்க ஐரோப்பாவுக்கே உரியது.

ஐரோப்பிய கலாசாரத்தில் ஒயில்டின் சலோமி ஏற்படுத்திய தாக்கம் எவ்வளவோ அதைவிட அதிக அளவுக்கு இந்த நடனத்தின் தாக்கமும் இருப்பதாகச் சொல்லலாம். ரிச்சர்ட் ஸ்ட்ராஸால் ஒரு ஒபேராவாக வடிவமைக்கப்பட்ட பெருமைக்குரிய  இந்த நடனம் இன்றும் அரங்கேற்றப்படுகிறது - தன்னை மறைத்திருக்கும் திரைகளை ஒவ்வொன்றாய் கழட்டி வீசி, முடிவில் முழு நிர்வாணமாய் நிற்கிறாள் சலோமி. நாடகத்தின் மையமே இதுதான். ஒழுக்கக்கேட்டை Decadent Movement என்ற பெயரில் ஒரு இயக்கமாகவே முன்னெடுத்துச் சென்றவர்களில் ஒருவர் ஒயில்டு. விக்டோரிய காலத்து இறுக்கமான ஒழுக்க நியதிகளைத் தளர்த்தி நவீனத்துவத்துக்கு ஐரோப்பிய பண்பாட்டைக் கொண்டு சென்ற இயக்கம் அது. உணர்ச்சிகளின் உத்வேகம் கலை வடிவம் பெற்று ஒழுக்க விழுமியங்களைக் குலைப்பதைக் கொண்டாடும் இந்த நாடகத்தில் மிக முக்கியமான இந்த நடனத்தில் ஆபாசத்தை நினைவூட்டக்கூடிய சாத்தியங்கள் அத்தனையையும் மென்று முழுங்கி விடுகிறார் அகிலன்.
ஆட்டம் ஆரம்பமாகியது. சலோமி நடனமாடினாள்.

வசந்த காலத்து வெள்ளை ரோஜா தென்றலில் அசைவது போலத் தன் அங்கங்களை மெதுவாகக் குலுக்கினாள் சலோமி. தென்றலின் வேகம் கணத்துக்கு கணம் அதிகமாகியது. அந்த ரோஜாவின் மெல்லிய இதழ்கள் வரவர அதிகமாகக் குலுங்கின. பிறகு புயலில் அகப்பட்டது ரோஜா! - அவள் இன்ப போதையில் மயங்கியவள் மாதிரி ஆரம்பத்தில் லேசாக நெளிந்தாள். பிறகு ஆட்டம் வேகம் பெற்றது. உள்ளத்து உணர்வுகள் அவளுக்குள் நன்றாய் மலர்ந்து கொண்டன. முத்துப் பல் வரிசை காட்டிக் கொண்டே கண்களைச் சுழற்றினாள். மலர்ந்த பூவில் தேன் உறிஞ்சும் சிறு வண்டைப் போல் அவளுடைய கரங்களும் மேலாடையும் துடித்தன. சுழன்று சுழன்று, நெளிந்து நெளிந்து ஆடினாள். வளைந்து, குனிந்து, நிமிர்ந்து, ஒடி, ஒடுங்கி ஆடினாள்.

முடியுந் தருவாயில் அவளுடைய நடனம் பயங்கரமான அழகோடிருந்தது. இன்ப வெறி தலைக்கேற மின்னல் வேகத்தில் சுற்றினாள் - தென்றலின் ஆரம்பம் புயலில் முடிந்தது. பனி முத்துக்களைப் பெற்ற புது மலர் மாதிரி வேர்வை அரும்பி வழியும் வதனத்தோடு தன் ஆட்டத்தை முடித்துக் கொண்டாள்.

மன்னனின் முன் வந்து மண்டியிட்டாள் சலோமி.
மன்னன் ஹெரோத், தன் அண்ணனைக் கொன்று அவன் மனைவி ஹெரோதியஸை தனது உடைமையாக்கிக் கொண்டவன். சலோமி அவளது முதல் கணவனுக்குப் பிறந்தவள். சலோமியை மோகிக்கிறான் ஹெரோத். அகிலனின் வரிகளில், "அவனுடைய அடங்காத வெறிக்கு முன்பு,  அவளுடைய பொங்கும் இளமைக்கு முன்பு, கட்டுப்பாடு எங்கே? கண்ணியம் எங்கே? வரைமுறை எங்கே?"

ஹெரோத்தின் ஒழுக்கக்கேட்டையும் அவனது ஆட்சியின் அலங்கோலங்களையும் மக்கள் மத்தியில் கடுமையாய் விமரிசித்த தீர்க்கதரிசி ஜோகானான் மன்னனின் மாளிகையில் சிறைக் கைதியாக இருக்கிறான். அரண்மனையை அரங்காகக் கொண்ட இந்த நாடகத்தில் அவனது குரல் ஒரு அறச்சீற்றமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சலோமிக்கு அவன் மேல் காதல் - 'அந்தக் குரல் ஒரு தூண்டிலாக உருவெடுத்து அவளுடைய இருதய மீனைக் குத்தி இழுப்பது போன்ற ஒரு வேதனை'. 'உங்களுக்கு ஒரே ஒரு முத்தம் ஜோகானான்,' என்று இறைஞ்சும் சலோமியை விபச்சாரிக்குப் பிறந்த பாவி என்று வசை மழை பொழிந்து நிராகரித்து விடுகிறான் ஜோகானான். எப்படியும் உங்கள் இதழ்களுக்கு முத்தமிட்டே தீருவேன் என்று சூளுரைக்கும் சலோமி, அரசனின் ஆசைக்கு இணங்கத் தீர்மானிக்கிறாள். அவன் ஆடச் சொல்கிறான். ஆடி முடித்ததும் ஜோகானனின் தலையை விலை கேட்கிறாள். முதலில் பயப்படும் அரசன், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தீர்க்கதரிசியின் தலையை அவள் கேட்டபடி வெள்ளிக் கேடயத்தில் எடுத்துவந்து வந்து தருகிறான். 'என்னுடைய ஆசைக்கனவு நிறைவேறிவிட்டது - இந்தக் கன்னிப்பெண் தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டாள்" என்று அவனது வெட்டப்பட்ட தலையின் இதழ்களுக்கு முத்தமிட்டுக் களிக்கிறாள் சலோமி.

எந்த அறத்தையும் ஒழுக்கத்தையும் உன்னதப்படுத்தாமல், ஒழுக்கக்குலைவை, காமம் என்று கண்டிக்கப்படும் உணர்ச்சி மேலீடே அதன் கருவி என்று கொண்டாடும் ஓயில்டின் இந்த நாடகம், அகிலனின் தழுவலில் வேறு உணர்ச்சி பெறுகிறது. ஒழுக்கம் குறித்து கவலைப்படும் ஹெரோதியஸ், ஜோகானன் இருவருக்கும் எதிரான அழகியல் நிலைப்பாடு கொண்டவர்களாக இருக்கின்றனர் ஹெராதும் சலோமியும். ஒழுக்கமற்ற சூழலில் வாழும் பெண் ஒருத்தி ஒழுக்கத்தை வலியுறுத்தும் துறவி ஒருவன் மேல் கொண்ட பொருந்தா காதலாக, அறத்தின் தன்மையையே அறியாத மனித மனமும்கூட தானறிந்த வழியில் அறத்தையே நாடும் என்பதைச் சொல்லாமல் சொல்லும் நீதிக் கதையாக, ஒயில்டின் கதை அகிலனின் வாசிப்பில் உருமாற்றம் பெறுகிறது - "இதில் வரும் இளவரசியின் உணர்ச்சிப் புயலுக்குத்தான் எத்தனை வேகம், எத்தனை வெறி, எத்தனை துடிதுடிப்பு, எத்தனை இறுமாப்பு! அவளுடைய செய்கைக்காக நாம் ஆத்திரப்படுவதா? அனுதாபப்படுவதா?" என்று வியக்கிறார் அகிலன்.

ஒவ்வொரு வாசகனும் தனக்குரிய பிரதியை தன் விருப்பப்படி வாசித்துக் கொள்கிறான் என்று சொல்கிறார்கள், இதைக் கொண்டாடவும் செய்கிறார்கள். அகிலன் செய்திருப்பதை மொழிபெயர்ப்பு என்றோ தழுவல் என்றோகூட சொல்ல முடியாது, ஒயில்டின் கதையில் தன் உணர்வுகளைப் புகுத்தி, ஒரு புதிய புனைவையே செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

தாகம், அகிலன்,
அக்டோபர் 1997 பதிப்பு,
தாகம் பதிப்பகம், சென்னை 17
4345904
விலை ரூ.15
இணையத்தில் வாங்க - சென்னைஷாப்பிங்.காம்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...